சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – பதின்ம வயதின் அற அலைச்சல்

Post-war காலப் பகுதியில் வெளியாகிய பல்வேறு கதைகள் பெரும்பாலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க இயலும். பெரும்பாலான கதைகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நாயகன் முன்னாள் போராளி ஒருவரைத் திருமணம் செய்ய இலங்கைக்கு வருவார்; ஆனால், அவ்வீட்டுக்கு அருகிலிருக்கும் உள்ளூர்வாசியொருவர் பொறாமையில் அம்முன்னாள் போராளியைப்பற்றித் தவறாகச் சொல்ல நாயகன் அதனை நம்பி விட்டுவிட்டு மீண்டும் தான் வாழும் நாட்டுக்குச் செல்வார். (புலம்பெயர்ந்த நாம் உதவிசெய்ய வந்தாலும் உள்ளூர் வாசிகள் விடுவதில்லை என்ற தொனி அதிலிருக்கும்) இல்லையெனில் முன்னாள் போராளிகள் வெவ்வேறு விதமாகச் சமூகத்தினால் புறக்கணிக்கப்படுவதை மீண்டும்….மீண்டும் தேய்வழக்குடன் கற்பனைவளமின்றி எழுதியதாகவிருக்கும். இல்லையெனில் இலங்கையில் வாழ்ந்த நிகழ்வுகளில் எஞ்சியதை வைத்து ஏதோவொரு கதையை எழுத முயல்வதாக இருக்கும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? அங்கிருக்கும் வாழ்க்கையை, புலம்பெயர்ந்து அந்நாட்டுப் பண்பாட்டுச்சூழலில் புகும்போது ஏற்படும் முரண் இயக்கங்களை வைத்துக்கொண்டு நுண்மைகளோடு எழுதப்படும் கதைகளைத்தான். ஆனால் அவ்வாறு எழுதப்படும் கதைகள் ஒப்பீட்டு அளவில் மிகக்குறைவானவை என்பதே உண்மை.

பத்திகளைச் சலிப்பில்லாமல் எழுதுவதற்குப் பெயர்போன இளங்கோ [டி.சே.தமிழன்] அபூர்வமாக எழுதிய புனைவுகளில் சிலவற்றை ஏற்கனவே முன்னம் வாசித்திருக்கின்றேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இயல்பாக எழும் சிக்கல்களை வைத்து, பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த ஒருவனின் பார்வையில் நகரும் கதைகளாக அவையிருந்தன. இளங்கோவின் சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் புத்தகம் கைக்குக் கிடைத்தபோது ஆர்வமாகத் தட்டிப்பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு கதைகள்.

deseq

‘கோபிகா ஏன் அப்படிச்செய்தாள்’ சிறுகதை நீண்ட நாட்களுக்குப் பின் நாட்டுக்கு வரும் ஒருவரின் பார்வையில் நகரும் கதை. நீண்ட நாட்களுக்குப்பின் தாய்நாடு வரும்போது ஒருவித மிதப்பான பார்வையில் புறச்சூழலை அவதானிக்கிறார் கதைசொல்லி. மச்சாள்காரி விழுந்து விழுந்து கவனிக்கின்றாள். அவளின் கணவர் சிவா இயக்கத்தில் இருந்துவிட்டு இடைவிலகி வந்தவர். அதற்குக் காரணமாகவிருக்கும் சம்பவம் சுவாரசியமானது. கோபிகாவைக் காதலித்த கபிலன் இயக்கத்துடன் தொடுப்பில் இருந்தவர். தனிப்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவத்தினால் ஏற்கனவே இயக்கம் மீது கடும் சினத்திலிருக்கும் கோபிகாவின் தகப்பன் வேறொருவருக்குக் கோபிகாவை திருமணம் செய்துவைக்க முயல்கிறார். கோபத்தில் கிளர்ந்தெழுந்த கபிலன் தகப்பன் இல்லாத நேரம் கோபிகாவின் வீட்டில் புகுந்து கோபிகாவின் காலில் வெட்டி விடுகிறான். ஒரு காலில் மூன்று விரல்கள் செயலிழந்து விடுகின்றன. தடுக்க வந்த தாய்க்கும் வெட்டு. பிற்பாடு அவன் வன்னிக்குச் சென்று முற்றுமுழுதாக இயக்கத்துடன் இணைந்துவிடுகிறான். அங்குதான் கபிலனுக்குச் சிவா அறிமுகமாகிறான். சிவாவுடன் நண்பனாக இருந்த கபிலன் சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் இயக்கத்தைச் சுழித்துவிட்டுப் படகேறி இந்தியா சென்றுவிடுகிறான். அந்தச் சம்பவத்தால் சிவா பங்கருக்குச் செல்ல நேர்கின்றது. அப்படியே இடைவிலகி இயக்கத்தைவிட்டு வந்தவர்தான் சிவா. இந்தியா சென்ற கபிலன் ஒரு பெண்ணோடு காதல்வயப்பட்டு அப்பெண்ணைக் கடத்த முயன்று மாட்டுப்பட்டுச் சிறைவாசம் சென்று இறுதியில் பம்பாய்ச் சென்றுவிடுகிறான். இந்தக் கதைகளைக் கேள்விப்படும் கதை சொல்லிக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அதைவிடப் பெரும் அதிர்ச்சிதரும் விடயத்தைக் கேள்விப்படுகிறான், அது கோபிகா ஒருநாள் கடிதம் எழுதிவிட்டுக் கபிலனை தேடிப்போய்விட்டாள் என்பதே. அதை மட்டும் கதை சொல்லியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கதைக்குள் எங்கையோ ஒர் ஒருமை புதைந்திருக்கின்றது. அதைக் கண்டறியவே அவனால் முடியவில்லை. அந்தத் திகைப்புப் புதிதாக வாங்கிக்கு அடித்த வார்னிஷ் நிறப்பூச்சில் ஒட்டிய தூசு போலத் துடைத்தெறிய முடியாமல் இருக்கின்றது. கோபிகா ஏன் அப்படிச்செய்தாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறும்போது மக்களும் இயக்கத்தை அவ்வாறு நேசித்திருப்பார்களோ என்று அவனுக்குத் தோன்றுகின்றது. நேசித்த இயக்கம் என்னதான் நேசித்தவர்களுக்கே துன்பம் தந்தாலும் இயக்கத்தை அவர்கள் வெறுக்கவே இயலவில்லை. அதுவே தவிர்க்க இயலாத பொது மனநிலையாக இருக்கின்றது. வெறும் கதை சொல்லலால் நகரும் இக்கதை புறச்சூழல் வழியே கேள்விப்படும் கதைகளை அடுக்கி ஒரு புனைவாக எழுகிறது. கணவாய் கறியும் புட்டும் மாம்பழமும் சாப்பிட்டு ருசி காணும் சில நுண்மையான அவதானங்களோடு நகர்கின்றது.

‘பனி’ என்கின்ற கதை இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகளில் ஆகச்சிறப்பானது. கனடாவுக்குப் பதின்மவயதில் விசா இல்லாமல் குடியேறவரும் ஒருவனைப்பற்றிய கதை. சடகோபன் விசா இல்லாமல் கனடாவிற்கு வந்து நாட்டில் கடுமையான யுத்தம் என்று இமிகிரேஷன் அதிகாரிகளுக்கு முன் கையைத் தூக்குகிறார். அங்கிருந்து கனடா வாழ்க்கை அவருக்கு ஆரம்பமாகிறது. வீட்டில் இரண்டு தங்கைச்சிகள், அவர்களை மறந்திடவேண்டாம் என்று அம்மா தினமும் நச்சரிப்பு. பாடசாலைக்குச் செல்வதும் பகுதிநேர வேலைகளுக்குச் செல்வதுமாக அவனது பொழுதுகள் நீளுகின்றன. எப்போதும் வேலையும் படிப்புமாக இருக்கும் அவனுக்குப் பிலிப்பைன்ஸ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் தோழியாக அறிமுகமாகிறாள். அவளுடனான ஊடல்கள் அவனுக்கு மகிழ்ச்சியையும் விடுதலையையும் தருகின்றன. எந்த நாட்டுப் பெட்டைகளுடனும் திரி; ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரி மட்டும் வேண்டாம் அவர்கள் நச்சரித்து உன்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் கறந்துவிட்டுக் கழற்றி விடுவார்கள் என்று வழமையான தமிழ் மனநிலையில் உபதேசம் செய்கிறார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடன் இனிமையாக நாட்களைக் கழிக்கிறான். வாரத்தில் ஆறு நாட்களைக் குடும்பத்துக்கு உழைப்பதற்கும் மிகுதி ஒரு நாளை அவளுக்காகவும் ஒதுக்கி வைத்திருந்தான். இளமையின் தனிமைகளை வெற்றிடங்களை நிரப்பிக்கொள்ளப் பெண்வாசம் தேவையாக இருக்கின்றது. நிராகரிக்க முடியாத அடிப்படை மனித இயல்பாக அது இருக்கின்றது. இறுதியில் அவளின் உறவை இவனே வெட்டிவிட வேண்டியதாகின்றது. காலம் செல்லச்செல்ல பொருளாதாரம் விரிய தங்கச்சிமாருக்குத் திருமணம் செய்து தன் மீது சுமத்தப்படப் பொறுப்புகளைக் களைகிறான். இலங்கையில் இருந்து வரும் சுகந்தி என்ற பெண்ணோடு அவனுக்கும் திருமணம் நிகழ்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவனது வாழ்க்கை ஒரு நிலையான நிலைக்கு வரும் என்று எதிர்வு கூறியபோதும், அது முற்றிலும் சிதைகின்றது. சுகந்திக்கு இலங்கையில் இறுக்கமான காதல் இருந்தது, அதிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எறியப்பட்ட தாபங்கள் இன்னும் ஓயாமல் இருக்கின்றது. உடலுறவில் இருந்து அனைத்துச் செயற்பாடுகளிலும் அவளது வெறுப்புக் கசிகிறது. ஒரு கட்டத்தில் அவள் இவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்று இலங்கைக்கே சென்று விடுகிறாள். வேகமாகச் சிதையும் அவனது உளவியல் மனப்பிறழ்வுக்குக் கொண்டு செல்கின்றது.

இக்கதை ஆழமாக, புலம்பெயர் தேசத்தில் வாழ முனையும் தமிழ் மனநிலையைப் பேசுகின்றது. ஒவ்வாத தேசத்தில் கிடைக்கும் இன்பங்கள் பல இடங்களில் தேவையாக இருந்தாலும் அதை மறுக்கும், வெட்டும் இடங்கள் தமிழ் மனநிலை புனிதப்படுத்தும் இடங்கள். பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரியின் உடலும் முத்தமும் சுட்டெரிக்கும் காமத்தை ஈடுசெய்யத் தேவையாக இருக்கின்றது, அதே நேரம் அவளை மணமுடிக்கத் தமிழ்மனம் தடையாக இருக்கின்றது. திருமண உறவின் மூலமாகத் தமிழ்ப் பெண்ணின் யோனியே தமிழ் ஆணின் விறைத்த குறிக்குத் தேவையாக இருக்கின்றது. தன் தாய் நாட்டில் இருக்கும் ஒரு பெண்ணைத் தேடி அவன் மனம் அலைகின்றது. அங்கிருக்கும் பெண்களே உகந்தவர்கள், தமிழ்ப் பண்பாட்டில் ஊறியவர்கள், குடும்பம் என்று வந்தால் அவர்களிடம் தஞ்சம் அடைவதே வசதியானது என்று ஆண் மனம் அல்லலுறுகின்றது. சுற்றித் திரிய வேற்று நாட்டுப் பெண்கள் தேவையாக இருக்கின்றது, குடும்ப உறவுக்குத் தமிழ்ப் பெண் தேவையாக இருக்கின்றது. இவ் முரண்புள்ளிகளைப் ‘பனி’ சிறுகதை தொட்டுச் செல்கின்றது.

சுகந்தி விவாகரத்துக் கேட்கும்போது தன் காதல்கதையைச் சொல்கிறாள். “அப்படியெனில் ஏன் என்னை விருப்பம் இல்லாமல் கலியாணம் செய்தனீர்?” என்று திரும்பிக் கேட்கும்போது, எல்லாம் மறந்திடலாம் என்று நினைச்சன். ஆனால், முடியவில்லை என்ற இலகுவான ஒரு பதிலைச் சொல்கிறாள். அப்ப இதற்கெல்லாம் நானா பலியாடு என்று சடகோபன் கத்துகிறான். சக மனிதன் பற்றி அக்கறை கொள்ளாத ஆதிப் பண்பான மனித இயல்பு வெளிப்படும் தருணம் அது. அந்த நேரத்தில் அவனுக்கு “என்னைக் கலியாணம் செய்யும்போது சுகந்தி வெர்ஜின் இல்லையா?” என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மனநிலையை ஒளிபாய்ச்சிக் காட்டும் இடங்களவை.

‘கொட்டியா’ என்ற சிறுகதை கொழும்பில் வெளிநாடு செல்வதற்காகத் தங்கி நிற்கின்ற பொடியனைப் பற்றிய கதை. யுத்தம் வடபகுதியில் தீயாக எரிகிறது. கொழும்பிலும் தாறுமாறாகக் குண்டுகள் வெடிக்கின்றன. தமிழர்கள் தங்கியிருக்கும் இடங்களெல்லாம் ராணுவம் திடீர்…திடீர் பரிசோதனைகளைச் செய்கின்றது. அச்சமயம் அறையொன்றில் தங்கியிருக்கும் பதின்ம வயது பொடியனின் அனுபவங்கள்தான் கதை. ஒரு முறை சோதனைக்கு வரும் இராணுவச் சிப்பாய் நித்திரையில் இருந்த இவனை எழுப்பும்போது இவனின் குறியைப் பிடித்துவிடுகின்றான். எப்படி அவன் இதைப் பிடிக்கலாம்? என்ற திடுக்கிடல் அரியண்டமாக அவனைக் கொல்கின்றது. கதை வளர்ந்து செல்லும்போது அதிலிருந்து விலகிப் பெண்களின் மனதைப் பேசும் ஒரு கதையாக முடிவில் எஞ்சுகின்றது.

தமிழர்கள் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் உளவுபார்க்காமல் உயிர்வாழ மாட்டார்கள் என்று குறிப்பிடப்படும் இடங்கள் கூர்மையான நகைச்சுவையை உணர்விக்கும் இடங்கள். புறநிலைத் தகவல்களில் குறிக்கப்பட்டிருக்கும் அரசியல் கிண்டல்கள், தமிழர்களின் பாரம்பரியங்களைக் கிண்டல் செய்யும் இடங்கள் அனைத்தும் கதையைச் சுவாரஸ்யம் குன்றாமல் வாசிக்க வைக்கின்றது. இக்கதையின் கூறு முறையில் இருக்கும் சிக்கல் கதையின் போக்கைச் சாதாரண டெம்பிளேட் கதையாக மாற்றிவிடுகின்றது. கதையின் ஆரம்பத்தில் இராணுவ வீரன் அவனது குறியைத் தடவியதும், அவனது சிங்களக் காதலி அவனுடைய குறியைத் தடவிக் கசப்பான அனுபவத்தை இன்பமாக மாற்றுவதோடு அச்சித்திரிப்புக்கள் ஓய்ந்துவிடுகின்றன. கதையின் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்த்திச்செல்ல அச்சித்தரிப்பு உதவவில்லை. அதே இறுதிவரையான கதையின் போக்கைத் தீர்மானிக்கும் குவிவு மையமாக இருந்திருந்தால் இக்கதை சிறப்பான கதையாகியிருக்கும்.

‘மூன்றுதீவுகள்’ கதையும் சாதாரண டெம்பிளேட் வகையில் சிக்கி வெற்று வார்த்தைகளாக இறுதியில் எஞ்சும் கதையாக மாறிவிடுகின்றது. ஒரு புதுவித நிலப்பரப்பில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் இரகசியத்தை ஒரு புள்ளியில் விளங்கிக்கொள்ளுதல், பின் வலிந்த முடிவு என்று நகருகின்றது.

பொதுவான இளங்கோவின் கதைகள் அதிகம் நுண்தகவல்களைக் கதைகளோடு சொல்கிறது. புறவயமான சித்திரிப்புகள் தமிழ் மனநிலையைப் பகிடி செய்துகொண்டு முன்னே நகருகின்றது. அகவயமான சித்திரிப்புகள் கதைகளில் இல்லை. அவற்றை ஆழமாகப் பேச எந்தக்கதைகளும் அதிகம் மினக்கெடவில்லை. விதிவிலக்காக ‘கள்ளி’ கதை. வழக்கமாக இலங்கை எழுத்தாளர்கள் எழுதும் குடும்பச் சித்திரத்தை, அல்லது வெற்று அரசியல் கோஷத்தை நோக்கிச் செல்லாமல் கனடிய/ அந்நிய புலம்பெயர் தேச வாழ்க்கைச் சூழலை நோக்கிச் சென்றிருப்பது ஒரு முக்கியமான இலக்கியக்கூறு. அ.முத்துலிங்கம் எழுதிக்காட்டிய புலம்பெயர் மக்களின் வாழ்க்கை அதிகம் பிளாஸ்டிக்தனம் கொண்டது. அங்கு இயல்பான இலங்கையர் ஒருவரைக் காண இயலாது. படித்த மேட்டிமைத்தனம் வாய்த்த மனித உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத ஒருவரையே நோக்க இயலும். இளங்கோவின் கதையில் உள்ள இலங்கையர்கள் யாழ்ப்பாணத் தமிழ் மனநிலையில் இருந்து கொண்டு அங்கு எழும் காமம்,குரோதம் அதில் மறைந்து எங்கோ ஓர் இடத்தில் மேலெழும் அறத்தின் வெளிப்பாட்டில் தத்தளிப்பவர்கள்.

ஒரு சம்பவத்தை உண்மையாக நிகழ்ந்ததை அச்சொட்டாக அப்படியே எழுதுபவர் புனைவு எழுத்தாளரே அல்ல. அது அவரது வேலையும் அல்ல. அவர் முழுக்கமுழுக்கக் கற்பனையால் ஓர் உலகத்தைப்படைத்து மெய்நிகர் வாழ்க்கையைக் காட்டும்போதுதான் அது நிகழும். அத்தகைய கற்பனைத் திறன் இக்கதைகளில் இருக்கின்றன என்பதும் உண்மை.

சிக்கல் இல்லாமல் இயல்பான மொழி நடையுடன், அயர்ச்சியைத் தூண்டாது எழுதப்பட்டுள்ளன இக்கதைகள். ஆனால்,உத்திகளில் இருக்கும் வெற்றிடம் பழைமையானது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் சித்திரித்து அவர்களுக்கு இடையில் எழும் பிணக்குகளைத் தொடர்வுபடுத்தும் முறையிலிருந்து இளங்கோ வெளிவரலாம். ஆயினும், நிகழ்வுகளிலிருந்து நினைவுகளுக்குச் சென்று அதன் உட்குறிப்புகளை உணர்த்திவிட்டு மீண்டும் வருதல் என்னும் சில உத்திகள் சிறப்பாக இக்கதைகளில் அமைந்துள்ளன. நம்பகமான ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பது இக்கதைகளில் நிகழ்ந்துள்ளது. அதனாலேயே இலங்கைச் சிறுகதைகள் என்ற அளவில் இக்கதைகள் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

நன்றி  : ஆக்காட்டி இதழ்-13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *