அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

ஜூட்‘ சிறுகதை பற்றி ‘பிரிந்தன்’ எழுதிய மதிப்பீடு.

சிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று அழகியலை அறிந்து கொள்ளல் அதன் தருணங்களை ரசித்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படுகின்ற நிலவியல் அம்சங்களோடு ஒன்றிப்போகும் போது அந்த நிலவியலோடே நாமும் விரிந்து கொண்டு போகின்றோம். பனி படர்ந்த மலைப்பிரதேசத்தின் ஊடாக கதை மாந்தர்கள் செல்லும் போது வாசர்கள் கண்களில் பனி படர்கின்றது. வெறுப்பின் உச்சத்தில் போய் மணிக்கட்டை அறுத்துகொள்ளும் போது கை நரம்புகள் எல்லாம் சிலிர்த்து போகின்றது. முதல் கடிதத்தை காதலிக்கு கொடுத்துவிட்டு ஒளிந்திருந்து  என்ன செய்கின்றாள் என்று பார்க்கும் போது கண்கள் படபடத்து கொள்கின்றன. கதை மாந்தர்கள் நகரும் இடமெல்லாம் நாமும் நகர்ந்து போகின்றோம். அவர்களின் உணர்வுகள் எங்களினுள்ளும் தொற்றிகொள்கின்றது. இந்த அனுபவம் தான் சிறுகதை. இதில் உண்டாகும் தருணங்கள் மகத்தானவை. கறுப்பு புள்ளி எழுத்துகளின் ஊடு இந்த பிரபஞ்ச அசைவுகளை எல்லாம் அனுபவித்து விடுகின்றோம்.

அப்படித்தான் நாய் வீட்டு ராஜரத்தினத்தின் வீட்டு ஒழுங்கையும். யாழ்பாணம் என்றில்லாமல் வடக்கின் எல்லா ஊர்களிலும் அப்படி ஒரு ராஜரத்தினமும் ஒழுங்கையும் இருந்துகொண்டிருகிறது. எங்கள் வீட்டின் எதிர் ஒழுங்கையிலும் அந்த ராஜரத்தினம் இருந்துகொண்டிருக்கின்றார். இந்த மனநிலை உருவாக்கம் மனதினில் ஆழப்பதிவதாக ஜூட் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது. சிறுகதை ஒன்றின் நீள் கால நிலைப்பு, அதில் பதியப்படுகின்ற கூறுகளின் கனத்திலேயே தங்கியிருகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழ்வியலின் தடயங்களை பெரிதளவில் இலக்கியங்களிலிருந்தே சேகரித்து கொள்கிறோம். அடுத்த சந்ததிக்கு அதை பாதுகாத்து கடத்த முயற்சி செய்கிறோம். இந்த செயன்முறைக்கு ஏதுவான இலக்கியங்களே மகத்தான இலக்கியங்கள். சிறுகதைகளையும் அந்த நோக்கோடு பார்க்கலாம். ஒரு சிறுகதையால் சமூகத்தில் மாற்றம் உருவாகிவிட முடியாது. சமகால அயல் எழுத்தாளர்களை அவர்களே அறிமுகப்படுத்தும் வரை நாமறியோம் என்னும் கீழ் நிலை சமூகத்தில் இருக்கும் போது சமூக மாற்றம் இயலாத ஒன்று. ஆனால் ஒரு சிறுகதையால் மனதில் மூலைகளில் கஞ்சலாய் கிடக்கின்ற அனுபவங்களை மீட்டி கொண்டுவந்து தரமுடியும். அந்த களத்தில் எம்மை அமர்த்தி ரசித்திகொள்ள முடியும். சிறுகதை என்ற கலை வடிவத்தின் வெற்றி அந்த பிணைப்பில் தான் இருகின்றது. ஜூட் இல் வருகின்ற கீர்த்தனாவும், சியாமளனும், தங்கராசும் எம்முள் இருகின்றவர்களே. வீதியில் செல்லும் போது அந்த வீதி முடிவு மட்டும் விடாமல் துரத்திக்கொண்டு வருகின்ற ஜூட்கள் எம்மத்தியில் இருகின்றனவையே. இந்த கதைமாந்தர் அன்னியோன்யம் கதையை மூளைக்கு வலிக்காமல் செலுத்த பெரும் உதவி புரிகின்றது.

கதையின் பின்னணி பெரும்பாலும் இரண்டாயிரத்து ஐந்து ஆறுகளில் இருந்திருக்க கூடும். போர் சுற்றிகொண்ட காலம். ஒரு சாதாரண எழுத்தாளான் பார்வையில் யாழ் நகர மக்கள் வாழ்வு வெறிச்சொடிப்போய் இருந்திருக்கும். புறவயமாக அவர்களின் இன்னல் நாட்கள் மனக்கசப்புகள் என போரின் மீதான கொடூரம் எழுத்துகளை எரித்துகொண்டிருக்கும். ஆனால் ஜூட் வேறுவிதமாக நகர்கின்றது. யாழில் வாழ்ந்த எழுத்தாளன் போரின் நடுவில் காணுற்ற கொண்டாட்டம் உவகையளிக்கின்றது. ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியாக்கிகொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலை கூறுகின்றது. இயல்பற்ற அவர்களின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற சந்தோஷமான விடயங்களை கூறுகின்றது.

 

வெறுமையான பிளாஸ்டிக் சோடாப்போத்தலில் தண்ணீரை முழுவதும் நிரப்பிவிட்டு மூடியை இறுக்கிமூடி கேட்களின் அடியில் கட்டிவிடுவது யாழ்ப்பாண வீட்டார்களின் வழமை. கேட்டின் கறல்பிடித்த கம்பிகளை முகர்ந்துவிட்டு பின்னங்காலைத்தூக்கி உச்சா போகும் நாய்கள் நீர் நிரப்பிய போர்த்தல்களைக் கண்டவுடன் உச்சாபோவதில்லை. கேட்டினை முகர்ந்து அப்படியொரு எண்ணத்தில் அணுகுவதும் இல்லை. இந்த நூதன கண்டுபிடிப்பை யார் கண்டறிந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இன்றுவரை யாழ்ப்பாண வீடுகளில் நாய்கள் மதில்களிலும் வீட்டு கேட்களிலும் உச்சா போகாமல் தடுப்பதற்கு பயன்படுத்தும் பிரசித்திபெற்ற முறையாக இருந்துகொண்டிருகின்றது.  ஆரம்பத்தில் வீடுகளுக்கு ரோந்து செல்லும் இராணுவத்தினர் அந்த செட்டப்பைப் பார்த்து கொஞ்சம் சந்தேகப்பட்டனர். கீர்த்தனா வீட்டின் கேட்டிலும் இப்படிப் போர்த்தல்கள் கட்டப்பட்டிருகின்றது.

 

ராஜரத்தினத்தின் மனைவி யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலையில் இரவு பகல் சேவையாக மாறி மாறி தாதியாக சேவையாற்றிக்கொண்டிருப்பார். அவரிடம் வேண்டிக்கட்டும் நோயாளிகளின் பேச்சுக்கள் பிரசித்திபெற்றவை. வாய்பேச்சுக்கு இவரை மிஞ்சிக்கொள்ள எவரும் அந்தப்பிரிவில் இல்லாமல் இருந்தது. இவ பொல்லாத மனிசி, இந்த வாய்க்காரியோட மல்லுக்கட்டவேலாது என்று அடங்கிப்போபவர்களில் பெருவாரியான ஆண் தாதியரும் நோயாளிகளும் உள்ளடக்கம்.

 

யாழ் பற்றி கேள்வியுராத சில வாழ்வியலை அறியக்கொடியவாறு உள்ளது. இந்த தகவல் தளத்தினூடான சிறுகதையின் பயணிப்புதான் அதன் வலுவை கூட்டி கொள்ளும்.

 

சைக்கிளில் வருபவர்கள் தப்பிக்க உபயோகிக்கும் நுட்பம் துரத்தும் நாய்களின்மீது குறிபார்த்து காறித்துப்புவது. துப்பினால் யாழ்ப்பாணத்து ஊர் நாய்களுக்கு அறவே புடிக்காது 

 

 

நிதர்சனமான சிக்கலையும் அதன் பின்னாலான சம்பவகோர்ப்புக்களும் கதையின் தளத்தை மாற்றிவிடாமல் கொண்டு செல்ல வழிசெய்கின்றன. இன்றைய சிறுகதைகள் உலகில் பெருவாரியான கதைகள் மிருகங்கள் பறவைகள் என்ற உயிரின வட்டத்துக்குள் நின்று பேசுகின்றன. அதில் ஒன்றகாவே இந்த கதையில் இருந்து அழகியலை எடுத்துவிட்டால் எஞ்சும். கதையின் கருவுக்கு அதிக கவனம் செலுத்து இருக்கலாம் போல தோன்றுகிறது. யாழ் செம்மண் வீதிகளில் இருந்து லண்டனுக்கு மாறியபோது உண்டாகின்ற கதைப்பிளவு தள மாற்றத்தை சீராக ஏற்படுத்துவதில் சிக்கலை உண்டாகுகின்றது. ஜூட் இன் மறைவில் எழுத்தாளர் ஏற்படுத்தி இருக்ககூடிய கனம் யாழின் பெரும் சோகத்தை கொண்டு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதை மிக சாதாரணமாக கடந்து செல்கிறார்.

கதையின் நடுபகுதியில் வருகின்ற கீர்த்தனாவின் முன்னை நாள் அனுபவங்கள் தொய்வினை ஏற்படுத்துகின்றது. ஆனால் அதிலும் எழுத்தாளர் உருவாக்குகின்ற யாழ் பின்னேர வகுப்பின் பின்னரான மெல்லிய கூடல்கள் ரசிக்க வைக்கிறது.

மிகையில்லாமல் சாதாரண ஒரு வாழ்க்கையையும் வாழ்வியலையும் ரசிக்கும் படியாக , மிக முக்கியமாக யாழின் அழகியலை பதிகின்ற விதமாக ஜூட் என்ற சிறுகதை எல்லா வயதெல்லைக்கும் ஏற்புடையதாக எழுதப்பட்டுள்ளது. எந்த சலனமும் இல்லாமல் முற்று முழுதாக யாழையும் நாக்கில் எச்சில் வழிந்து கொண்டிருக்கும் ஜூட்களையும் அனோஜன் பாலகிருஷ்ணன் அவரின் தெளிவான விவரிப்புக்கள் மூலமும் கதை சொல்லல் மூலமும் வாசகனை அணுகியிருப்பது ஜூட் இன் வலிமையான இருப்பை உறுதிசெய்கின்றது.

நன்றி : http://brinthanonline.com/2017/04/18/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *